மாநாடு: அடுத்த கட்டம்
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு 30.10.2011ல் நிறைவடைந்தது. மாநாட்டுஅமர்வுகளில் 200க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற பேராளர்கள் பங்கேற்றனர். மூன்று நாள் மாலையிலும் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளில் மொத்தம் 1,500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டு அமர்வுகளில் 10க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் 30க்கு மேற்பட்ட கட்டுரைகளைப் படைத்தனர். கட்டுரைகள் அனைத்தும் முன்கூட்டியே நகல் வடிவத்தில் பேராளர்களுக்கு வழங்கப்பட்டன. முன்னதாகவே அவற்றைப் படிக்கவும் விவாதங்களில் பங்கேற்கவும் இது வகை செய்தது. இக்கட்டுரைகள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு நூல் வடிவில் விரைவில் வெளியிடப்படும். படைக்கப்பட்ட கட்டுரைகளில் ஆர்வமுள்ளோர் சம்பந்தப்பட்ட கட்டுரையாளரை நேரில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்புகளின் இறுதியில் அவர்களின் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
மாநாடு பற்றிய கருத்துகள் பெரும்பாலும் ஆக்ககரமானவையாகவும் ஊக்கமூட்டுபவையாகவும் இருக்கின்றன. இந்த மாநாட்டிற்குக் கிடைத்த அமோக ஆதரவைக் கருத்திற்கொண்டு, மாநாட்டை இதே கருப்பொருளுடன், இதே சின்னத்துடன் ஈராண்டுக்கு ஒருமுறையோ மூவாண்டுக்கு ஒருமுறையோ சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நியமிக்கும் ஓர் அனைத்துலக ஆலோசனைக் குழுவின் மேற்பார்வையில் நடத்த அனைத்துலக நிரல் குழு பரிந்துரை செய்துள்ளது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா. ஆண்டியப்பன், இந்தப் பரிந்துரைகளை ஏற்று மாநாட்டின் முடிவில் அறிவித்ததுடன் 2013ல் அல்லது 2014ல் நடைபெறவிருக்கும் அடுத்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்ய அனைத்துலக ஆலோசனைக் குழுவை நியமிக்கவும் ஒப்புக்கொண்டார்.
|
|